29 ஜூன் 2014

இந்து மயானத்திற்கும் உரிமை கோருகிறது சிங்களப்படை!

வவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடிகூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று காலை சடலம் ஒன்றைத் தகனம் செய்ய சென்ற போது பௌத்த மதகுரு ஒருவரும் படையினரும் இணைந்து தடைவிதித்துள்ளனர். உடலைத் தகனம் செய்வதற்காக பேயாடிகூழாங்குளம் சுடலையில் உறவினர்கள் ஏற்பாடுகளைச் செய்வதற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த படையினர், உடலை இங்கு எரியூட்டமுடியாது என்று தடுத்துள்ளனர். குறித்த காணி தமது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப்பகுதி கிராமசேவகர், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா பிரதேச செயலர் ஆகியோர் அங்கு கூடினர். காலம் காலமாக இந்த பகுதியில் சுடலை இருந்தது என்றும், அந்த இடத்தில் எரியூட்ட அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் படையினருடன் கலந்துரையாடினர். இதனால் அப்பகுதியிலிருந்து படையினர் கலைந்து சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக