13 செப்டம்பர் 2013

ஐந்து முனைகளிலிருந்து சிங்களம் மீது தாக்குதல்!

தமிழர்களின் பிரதேசமாகிய வடக்கின் ஐந்து முனைகளிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மீது கடும் தாக்குதல் நடத்தப்படவுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய களமாக யாழ்.மாவட்டமே திகழப்போகின்றது. இங்குதான் நாங்கள் ஆட்லறிகள், பீரங்கிகள் போன்ற மிகப் பெரிய ஆயுதங்களை வைத்துத் தாக்கவுள்ளோம்.
எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள இந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஓடப்போகின்றார்கள் என்று வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் ரி.பிரகாஸ் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை அராலி மாவத்தை விளையாட்டுக் கழகத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களுக்கு சொந்தமானது. இந்த மாகாணத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும். தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடிய அனைத்து திறமைகளையும் கொண்டிருக்கின்றனர். இந்த மாகாணத்தை கடந்த காலத்தில் வான்படை, தரைப்படை, கடற்படை போன்ற சகல கட்டமைப்புகளுடனும் தமிழர்கள் ஆட்சி செய்தார்கள். அதேபோன்று இனிவரும் காலத்திலும் இந்த மாகாண சபையை நாங்களே ஆட்சி செய்ய வேண்டும்.
இங்கே எமது வீடுகளை, எமது சனசமூக நிலையங்களை, எமது திணைக்களங்களை நாங்களே ஆட்சி செய்கின்றோம். அதேபோன்று எமது மாகாண சபையையும் நாங்களே ஆட்சி செய்ய வேண்டும். நாங்கள் தென்னிலங்கையின் ஆட்சியைக் கேட்கவில்லை. அங்குள்ள சிங்கள மக்களுக்கு தெரிந்த சின்னங்கள் வெற்றிலையும் யானையும் மணயும் தான்.
ஆனால், எமது மக்களுக்கு தெரிந்த சின்னம் வீடு. இந்த வீட்டுக்கு நேரே புள்ளடியிடுகின்ற பாரிய தாக்குதலை தமிழ் மக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தவுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த தாக்குதலைத் தொடுக்கவுள்ளனர். இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் அரச தரப்பு ஒடவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் ஆட்சி அமைவது உறுதி. தமிழ் மக்கள் இதற்கான ஆணையை வழங்கத் தயாராகிவிட்டனர் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக