27 செப்டம்பர் 2013

பிரபாகரனின் துப்பாக்கிக்குப் பயந்தே தமிழர்கள் வாக்களித்துள்ளனர்-சம்பிக்க

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடைந்ததன் ஊடாக அரசாங்கம் அரசியல் ரீதியான தவறை செய்துள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்த இன சுத்திகரிப்புக்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையாகும். எனினும் வடக்குத் தேர்தலானது வடக்கில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றாமல் இன சமநிலையற்ற நிலையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது. அத்துடன் இது தமிழ் சுயாட்சிக்கு கைகெடுப்பது போன்ற செயல்.இதன் முடிவுகள் படுபயங்கரமானதாக இருக்கும். பிரபாகரனின் புதிய நாசிசவாதம் இந்த தேர்தலுடன் முன்னோக்கி வந்துள்ளது. இதனால் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைவதுடன் நாடுகடந்த தமிழ் அரசுக்கான ஒருங்கிணைவும் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து ஈழத்தை உருவாக்க சர்வதேச ரீதியில் ஆதரவை பெறுவதற்கான விடயங்களை வடபகுதி மக்கள் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழ் சமூகம் ஜனநாயக சமூகம் அல்ல. பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்தே வாக்களித்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ் செய்திகளுக்கு அமைய மக்கள் வாக்களித்து வருகின்றனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மக்கள் பேசுவதற்கான சுதந்திரமில்லை.மேலும் இந்த தேர்தல் மூலம் வெளிநாட்டு தூதரங்கள் இலங்கையின் வடக்கை ஆளுகை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை ,இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ் நாடு அரசாங்கம் போன்ற வெளிநாட்டு சக்திகள் வடக்கு மற்றும் தென் பகுதி மக்கள் ஐக்கியமாக இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக