21 செப்டம்பர் 2013

வாக்குப்பதிவு தொடங்கியது!


விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பெரும் இனப்படுகொலையுடன் முடிந்தது. அதன்பிறகு, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு தொடங்கியது. அத்துடன் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. 3 மாகாணங்களிலும் மொத்தம் 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 24 ஆயிரம் போலீசார் உள்பட 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மிக அதிக அளவில், யாழ்ப்பாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இந்த கட்சிக்கு முக்கிய போட்டியாக, அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது ராணுவத்தினர் மிகவும் கெடுபிடியில் ஈடுபட்டு வருவதாக, தமிழர் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டு வந்தது. சில தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் பிரசாரம் செய்து வந்தனர். ராணுவமே சில வேட்பாளர்களைக் களமிறக்கியும் உள்ளது. இந்திய ஓட்டுப்பெட்டி இலங்கையில் மரத்தினால் ஆன ஓட்டுப்பெட்டிகளை தேர்தலுக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓட்டுப்பெட்டிகள், பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.வரலாற்றுச் சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி, மாகாண கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு முதன் முதலில் 1988-ம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தனித் தமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் தீவிரம் அடைந்திருந்ததால் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக