15 செப்டம்பர் 2013

விக்னேஸ்வரனை முதல்வராக்கக் கூடாது!

விக்னேஸ்வரன் 
தமிழினத்தை கொச்சைப்படுத்தும் சி. வி. விக்னேஸ்வரனுக்கு வடமாகாண முதலமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. சி. வி. விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னையில் இருந்து வெளியாகும் தமிழர் விரோத பத்திரிகையான "இந்து" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தமிழக மக்களை ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிட வேண்டாம் எனக் கேட்டுள்ளார்.
இலங்கையில் நடப்பது சிங்களவருக்கும் தமிழர்களுக்குமான குடும்பப்பிரச்சனை என்றும் இப்பிரச்சனையில் அயலவர்களான தமிழக மக்களை தலையிட வேண்டாம் என்றும் தமிழக மக்களை அவமானப்படுத்தியும் அலட்சியப்படுத்தியும் உள்ளார்.
சில வாரத்திற்கு முன் இந்தியாவில் வெளியாகும் மற்றொரு பத்திரிகைக்கும் இதே கருத்தை தெரிவித்தார்.
கொழும்பில் பிறந்து வளர்ந்து சிங்களவர்களுடன் ஒன்று பட்டு வாழும் விக்கினேஸ்வரனுக்கு தமிழர்கள் பட்ட அல்லல்களையும், துயரங்களையும், வேதனைகளையும், அழிவுகளையும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்களின் எழுச்சி நடவடிக்கைகளைக்கூட விக்னேஸ்வரன் கொச்சைப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மரணித்த தியாகிகளின் உணர்வுகளைப்பற்றி சிங்களவர்களுடன் உல்லாசமாக வாழும் விக்னேஸ்வரனுக்கு எப்படித் தெரியும்.
தமிழர்களின் அடிப்படை உணர்வுகளையும் துயரங்களையும் வேதனைகளையும் தெரியாத விக்னேஸ்வரனை எமது முதலமைச்சர் ஆக்குவது எமக்கு நாமே தூக்கு கயிறு மாட்டுவதற்கு சமம்.
முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமானால், கற்பழிக்கப்பட்ட எமது தாய்க்குலத்துக்கு நியாயம் வேண்டுமானால், 90,000 விதவைகளுக்கு மானம் வேண்டுமானால், விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கப்படக் கூடாது.
வேட்பாளர் விக்னேஸ்வரனே தமிழர்களை அவமானப்படுத்தும் போது, முதலமைச்சராக அவர் வந்துவிட்டால், அவர் செய்யும் தமிழின விரோத நடவடிக்கைகளை எவரும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். இதற்கு ஒரே வழி விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராக வருவதை தடுப்பதேயாகும்.
"வெள்ளம் வரும்முன்பே அணைகட்டுவோம்-விக்னேஸ்வரனை முதலமைச்சராக வராமல் தடுப்போம்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக