21 செப்டம்பர் 2013

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் இன்று (21) நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் யாழில் 60 வீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகளவான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவுகள் மாலை 4 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது வாக்கெண்ணும் பணிகளுக்காக யாழ். மத்திய கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன.
இம்முறை யாழில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து பஸ்கள் மூலம் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
அதேவேளை, நெடுந்தீவில் இருந்து வழமையாக ஹெலி மூலம் எடுத்து வரப்படும் வாக்கு பெட்டிகள் இம்முறை கடற்படையின் படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பஸ்கள் மூலமே வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
வழமையாக யாழ். மாவட்ட செயலகத்திலேயே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும். ஆனால் இம்முறை யாழ். செயலகம் திருத்தி அமைக்கப்பட்டதனால் அங்கு போதிய இட வசதிகள் இல்லாத காரணத்தால் யாழ். மத்திய கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் யாழ். மத்திய கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையம் அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த போதிலும் பின்னர் அதற்கு சம்மதித்தனர்.
அதேவேளை, இன்று முழுவதும் யாழில் நடைபெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் பெருமளவான வன்முறை சம்பவங்களில் இராணுவத்தினரே ஈடுபட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் வன்முறைகள் இடம்பெற்று இருக்காவிடின் இன்னும் அதிகளாவான வாக்குகள் பதியப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்த பின் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 89 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்கெண்ணும் நிலையங்களில் முதற்கட்டமாக தபால் மூலமான வாக்கு எண்ணப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கி பிரயோகத்தை தவிர வேறெந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக