10 மார்ச் 2014

ஆதரவு திரட்டுகிறார் கமரூன்!

யாழில் கமரூன் 
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு தரக் கோரி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தனிப்பட்ட ரீதியாக கடிதங்களை அனுப்பியுள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் பணியக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ‘தி கார்டியன்‘ நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய அனைத்துலக அழைப்புகளுக்கு அந்த நாடு திருப்தியான பதில் அளிக்கத் தவறியுள்ளதால், அமெரிக்கா மற்றும் ஏனைய மூன்று நாடுகளுடன், போர்க்குற்றங்கள் குறித்த முழுமையான அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதில் பிரித்தானியாவும் இணைந்து கொண்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போது, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான விசாரணைகளை நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது.
இதையடுத்து, ஏனைய நான்கு நாடுகளுடன் இணைந்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிரித்தானிய அரசாங்கம், தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது.
போரின்போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட, மனிதஉரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அழைப்புக்கு ஆதரவாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வாக்கெடுப்பு இந்த மாத இறுதியில் நடத்தப்படவுள்ளது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு நாம் கடுமையாகப் பணியாற்றுகிறோம்.
சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் மனிதஉரிமைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தரக் கோரி, பிரதமர் டேவிட் கமரூன், பல நாடுகளின் தலைவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாக கடிதங்களை எழுதியுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக