09 மார்ச் 2014

உள்ளக விசாரணை கோருவதற்கு அமெரிக்காவும் ஐ.நாவும் எதற்கு?

அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருமென்று நம்பியிருந்த போதும் அது இப்பொழுது ஏமாற்றம் தந்து நிற்கின்றது. மேலும், ஐ.நா.சபையின் மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்படும் விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதேவேளை இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து கூறுவதற்கு ஐ.நாவோ அமெரிக்காவோ தேவையில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள வரைபு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கை இழைத்த மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட வேண்டுமென சிபாரிசு செய்தது போலவே, அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திலும் அது வலியுறுத்தப்படுமென உலகம் நம்பிக் கொண்டிருந்த வேளையில் திடீரென அமெரிக்க தீர்மானத்தின் வலுத்தன்மை குறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி தருகின்ற விடயமாக மாறியுள்ளது.
ஆனால் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கையில் சர்வதேச விசாரணையொன்று போர்க்குற்றம் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் அத்தகையதொரு சிபாரிசு இல்லாமலே போய்விட்டது. ஆகவே இந்த விடயம் பெருத்த ஏமாற்றம் தரும் விடயமாக தமிழ் மக்களுக்கு ஆகிவிட்டது. காரணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எவ்வகை ஈடுபாட்டைச் செலுத்தி தனது அதிகார வரம்புக்குள் உண்மையைக் கண்டறிய விளையும் என்பதில் சந்தேகங்கள் நிலவலாம்.
அதேவேளை இலங்கை அரசை நீங்களே விசாரணை செய்யுங்கள் என சுதந்திரமாக விட்டால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே விசாரிப்பதனால் உண்மையும் கண்டறியப்பட மாட்டாது. நீதியும் கிடைக்காது. இது தான் இவ்வளவு காலமும் இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளாகும். தங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாங்களே விசாரணை நடத்துமாக இருந்தால் இலங்கையில் எந்தவித போர்க்குற்றமும் இழைக்கப்படவி்ல்லை, எவ்வித மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லையென்றே கூறி தாம் தப்பித்துக் கொண்டுவிடுவார்கள். இப்படியான தீர்ப்பை வழங்குவதற்கு அமெரிக்காவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ எமக்கு வேண்டியதில்லை.
எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணையொன்று மேற்கொள்வதன் மூலமே இலங்கையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும். எனவே தான் வெளிநாட்டு அமைப்புக்களினதோ நாடுகளினதோ மேற்பார்வை இருக்க வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக