07 மார்ச் 2014

நடவடிக்கை எடுக்க இதுவே சரியான தருணம்!

நோபல் பரிசு பெற்ற தென் ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின், இலங்கை தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.
மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க இதுவே ஐக்கிய நாடுகளுக்கு கிடைத்துள்ள உரிய தருணம் என அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பேராயரின் அறிக்கையானது இலங்கையின் ஆர்வலர்கள், உலகம் முழுவதிலும் உள்ள 12க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.நா உறுப்பு நாடுகள் விழித்துக்கொள்ள சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
இலங்கையில் போர் நடைபெற்ற போது இடம்பெற்ற அட்டூழியங்களை கண்டறிய நீதி மற்றும் பொறுப்புக் கூறும் சர்வதேச விசாரணை கட்டமைப்பை ஐக்கிய நாடுகள் ஏற்படுத்த வேண்டும் என பேராயர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது.
தெளிவான ஆதாரங்கள் இருந்த போதிலும் சுதந்திரமான விசாரணைகளை நடத்தும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
மனித உரிமை பேரவையில், இலங்கையில் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இதுவே ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு உரிய நேரமாகும் என பிராட் எடம்ஸ் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, இலங்கை தொடர்பில் விசாரணையை நடத்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிறுபான்மை இன குடிமக்களின் உரிமைகளுக்கு மரியாதை வழங்க ஒரு முறையான ஒழுங்குமுறை இல்லாததே இலங்கையில் எதிர்நோக்கப்படும் பாரிய பிரச்சினையாகும் எனவும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை மோதலுக்கு பின்னரான செயற்பாடுகளை நேரம் எடுத்து செய்யும் போது அந்த விடயங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும்.
போர் முடிவடைந்து சுமார் 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நிலைமைகள் மோசமடைந்துள்ளதே தவிர சிறந்ததாக மாறவில்லை எனவும் டெஸ்மண்ட் டுட்டு தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக