03 மார்ச் 2014

நவனீதம்பிள்ளையின் அறிக்கையில் திருத்தங்கள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
இது தொடர்பான உத்தேச அறிக்கை ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பதிலளித்துள்ளது.
இந்த பதில்களின் அடிப்படையில் அறிக்கையின் ஒரு சில விடயங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தல், வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவற்றுக்கு கால வரையைறையொன்றை நிர்ணயித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதில் கோரப்பட்டிருந்தது.
எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில்களைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இறைமையுடைய நாடு என்ற ரீதியில் இலங்கை தொடர்பில் அவ்வாறான பணிப்புரைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்வைக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக