02 மார்ச் 2014

இலங்கை படையை விடவும் கொடூரமான க்யூ பிரிவு பொலிசார்!வாலிபர் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்பு முகாமில் அகதி ஒருவர் 01.03.2014 தொடக்கம் பட்டினிப்போராட்டம் நடத்துகின்றார் . உமாரமணன் கந்தசாமி (34)என்பவரே தன்னை UNHCR மூலம் இலங்கைக்கு அனுப்பும் படி கோரி பட்டினிப்போராட்டத்தை நடத்துவதாக அறிய முடிகின்றது.2008 ஆம் ஆண்டு தமிழகம் வந்த இவர் இலங்கைக்கு மருத்துவப்பொருட்கள் கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற பொய்யான காரணத்தை கூறி கைது செய்த Q பிரிவு காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . அங்கிருந்து நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மீண்டும் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தனர் . அக்குற்றச்சாட்டு நீதி மன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தமையால் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டார்.விடுதலையானவர், வழக்கிற்கு தவறாமல் நீதிமன்றம் சென்று வந்தார்.குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்த இவரை அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி மீண்டும் கைது செய்த Q பிரிவினர் புழல் சிறையில் அடைத்தனர் .7 மாதங்கள் சிறையில் இருந்த அவர் பிணையில் வெளியே வந்ததும் மீண்டும் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளனர் . நான்கு மாதங்களாக சிறப்பு முகாமில் எதுவித காரணமும் கூறாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவரது மனைவியிடம் சென்ற Q பிரிவு அதிகாரிகள் அவருக்கு மிரட்டல் விடுத்ததுடன் கணவரை பார்க்க செல்லக்கூடாது என்றும் அவ்வாறு சென்று பார்த்தால் அவரையும் அவரது சகோதரர்களையும் சிறப்பு முகாமில் அடைத்து விடுவதாக பல முறை மிரட்டல் விடுத்துள்ளனர் .இது குறித்து அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் மிரட்டல்கள் அதிகரித்ததே தவிர எதுவித பலனும் கிடைக்கவில்லை.Q பிரிவினரின் தொந்தரவு தாங்க முடியாத உமாரமணனின் மனைவியும் அவர்களது பெற்றோரும் இவரிடமிருந்து விவாகரத்து கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது . அதனால் விரத்தியடைந்த நிலையில் இருந்த இவர் தமிழகத்தில் இனியும் வாழ முடியாது என்ற நிலையிலேயே தன்னை இலங்கைக்கு அனுப்பும் படி கோரி பட்டினிப்போராட்டம் நடத்துகின்றார் .இலங்கையில் இராணுவத்தின் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியும் என்றும் தமிழத்தில் , தமிழர்கள் என்று கூறிக்கொண்டிருக்கின்ற காவல்துறையின் நீதிக்கு புறம்பான கொடுமைகளை தாங்கிக்கொண்டு வாழ முடியாதுள்ளது .தமிழத்தில் காலவரையரையற்ற தடுப்பு என்பது குடும்பங்களையே நிரந்தரமாக பிரித்து விடுகின்றது . இவ்வாறு பல குடும்பங்களின் நிலைமைகள் உள்ள போதும் Q பிரிவினரின் மிரட்டல்களால் வெளியில் சொல்ல யாரும் முன்வருவதில்லை . இவ்வாறான கொடுமைகளால் தொடர்ந்தும் வாழ முடியாது என்பதாலேயே இலங்கையில் ஆபத்து என்று தெரிந்தும் அங்கு அனுப்பும் படி கோரிக்கை விடுத்து பட்டினிப்போராட்டம் நடத்துவதாக அறிய முடிகின்றது .
அண்மையில் திருச்சி சிறப்பு முகாமில் மாற்றுத்திரனாளிக்கு உரிய வசதி செய்து தரும்படி தாசில்தாரிடம் கேட்ட நால்வர் பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தமையும் அதனைத்தொடர்ந்து உமாரமணனின் பட்டினிப்போராட்டமும் அங்கு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக