12 மார்ச் 2014

சுமந்திரன்,அனந்தி இருவரும் ஜெனீவாவில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு மீண்டும் ஜெனீவா பயணமானார். இதேசமயம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் மீண்டும் ஜெனீவா சென்றிருக்கின்றார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா புறப்பட்டார் என்று கூறப்படுகின்றது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு நீதி கேட்கும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் எம்.பி. அங்கு சென்றிருக்கின்றார்.
இதேசமயம், வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு தனது பிரதிநிதியாக அனந்தி சசிதரன் ஜெனீவா செல்வார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.கடந்த மாத முற்பகுதியில் ஜெனீவா சென்றிருந்த சுமந்திரன் எம்.பி.யும், அனந்தி சசிதரனும் அங்கு ஒன்றாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கைத் தமிழர் தரப்புக் கருத்துக்களை வலிமையாக முன் வைத்திருந்தனர்.தாங்கள் கூட்டாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்தமை குறித்து நாடு திரும்பியதும் பத்திரிகைகளுக்கு சிலாகித்து அனந்தி சசிதரன் பேட்டியளித்திருந்தார்.
எனினும், கடந்த வாரம் மீண்டும் ஊடகவியலாளரைச் சந்தித்த அனந்தி சசிதரன், மேற்படி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தமது கருத்தை வெளியிட சுமந்திரன் எம்.பி. தம்மை அனுமதிக்கவில்லை என்ற சாரப்பட பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இப்போது இருவருமே தனித்தனியாக ஜெனீவாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். இருவரும் தத்தமது தனித்தனி நிகழ்ச்சித் திட்டத்தின் படி அங்கு தமது பணிகளை முன்னெடுப்பர் என்று கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக