18 ஜூலை 2014

இலங்கையில் 15 நாட்கள் விசாரணை! ஐ.நா.அறிவிப்பு!

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் நான்கு விசாரணையாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவும், 15 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விசாரணையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விசாரணையில் பங்கெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் இலங்கை வரவுள்ள நான்கு விசாரணையாளர்களும் 15 நாட்கள் இலங்கையில் கள நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் நேர்காணல்களையும் செய்யவுள்ளனர்.
அந்த வகையில் மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவானது விரைவில் விசாரணை செயற்பாட்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு விசாரணையாளர் 10 மாத காலத்தில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த கண்காணிப்பையும் ஆவணப்படுத்தலையும் முன்னெடுக்கவுள்ளார்.
மேலும் அந்தவ­கையில் விசாரணை செயற்பாடுகள் பிரயாணங்கள் ஆவணப்படுத்தல் உள்ளிட்ட செலவுகளுக்காக 14,609,00 டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விசாரணையாளர்களின் பிரயாணச் செலவுக்காக 111,700 டொலர்­களும் விசேட நிபுணர்களின் பிரயாணச் செலவுக்கு 84,000 டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசகர்களுக்கான செலவாக 49,600 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
.எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாட்டின் எந்தவொரு நகர்வையும் ஏற்கப்போவதுமில்லை என்றும் விசாரணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவும் மாட்டாது என்றும் அரசாங்கத் தரப்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகின்றது.
2014 ம் ஆண்டு ஜூன் 15 ம் திகதி முதல் 2015 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதியாகும் போது விசாரணைக் குழுவின் முழுமையான அறிக்கை தயார் செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக