08 ஜூலை 2014

நாடு கடத்தப்பட்டவர்கள் பூசாவில்!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 41 புகலிடக் கோரிக்கையாளர்களும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார். கடற்படையினரின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 'சமுத்ரா' அவர்களை காலித்துறைமுகத்துக்கு அழைத்து வந்தது. மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் குற்றவிசாரணை பிரிவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து 41 புகலிடக் கோரிக்கையாளர்களும் அவுஸ்ரேலிய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24பேர் பெண்களாவர். அத்துடன் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்கள் தற்போது பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட ஆண்கள் வேறொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று 41 பேரும் காலி நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்படவுள்ளனர். இதன்போது சிறுவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக