09 மே 2013

பாலூட்டும் தாய்மார்களும் மின்னேரியா படை முகாமுக்கு அழைப்பு!

பா.அரியநேந்திரன் 
பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் பாலூட்டும் தாய்மார்களை கூட மின்னேரியா இராணுவ முகாமில் நடக்கவிருக்கும் பயிற்சி நிகழ்வுக்கு வருமாறு வற்புறுத்தி அழைக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் புகார் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பொருளாதார அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவரையும் மின்னேரியா இராணுவ முகாமிற்கு வருமாறு அரசாங்கம் அழைத்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அது குறித்து மேலும் கூறுகையில்
மின்னேரியாவில் உள்ள இராணுவ பயிற்சி முகாமுக்கு பட்டதாரி பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக கூறி தங்களுடைய பிள்ளைகள், கணவன்மார்,மனைவிமார் என அனைவரையும் அரசாங்கம் அழைத்துச் சென்றுள்ளதாக பலர் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பலர் கைக்குழந்தைகளை உடைய தாய்மார்கள் என்பதுடன் பலர் நோயாளிகளாகவும் உள்ளனர்.
இவர்கள் இந்த இராணுவ பயிற்சிக்குறிய உடல்,உளத் தகுதிகளை கொண்டிருக்கவில்லை இவர்களுடைய குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பதாக பெற்றோர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க உத்தியோகத்தர் பதவிகளுக்காக ஆட்சேர்க்கப்பட்ட இவர்களை மின்னேரியா இராணுவ முகாமில் வைத்து பயிற்சியளிக்க வேண்டிய தேவை ஒன்றுமில்லை இவர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டுமானால் ஒரு பொது இடத்திலோ அல்லது குறிப்பிட்ட பிரதேச செயலகத்திலோ பயிற்றுவிப்பாளர்களை கொண்டு பயிற்சியளிக்க முடியும்.ஆனால் மின்னேரியா இராணுவ பயிற்சி முகாமில் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த காலங்களில் பல்கலைகழக மாணவர்களையும் அரசாங்கம் தலமைத்துவ பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்தியிருந்தது அப்போது பல பெண் மாணவர்கள் கை,கால் முறிந்து நோய்வாய்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் அரசாங்கம் வயது வேறுபாடின்றி இவ்வாறான இராணுவ பயிற்சிகளை வழங்குவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
குறிப்பாக பல பெண்களை மின்னேரியா இராணுவ முகாமிற்குள் அழைத்துச் சென்று அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக கூறுவதை எமது தமிழ் சமூகமோ,அல்லது பெற்றோர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இப் பயிற்சிக்கு செல்லாவிட்டால் தங்களுக்கு வேலை கொடுக்கமாட்டார்களாம் என்ற பயத்தின் காரணமாகவே கைக்குழந்தைகளையும் தங்களது குடும்பத்தையும் விட்டு விட்டு 18 நாட்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுவதற்காக இவர்கள் சென்றுள்ளார்கள்.
எனவே தொடர்ச்சியாக மின்னேரியா இராணுவ முகாமில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளதால் இந்த பயிற்சிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதுடன் கடுமையான பயிற்சிகளை வழங்குவதையும் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என அரியநேந்திரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக