31 மே 2013

யாழில் சிங்களவர்களை குடியேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமய அடம்!

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த வடக்கைச் சேர்ந்த சிங்களவர்கள், மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாத நிலையில் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக பாரியளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே அக்கட்சியின் செயலாளர் ஸ்ரீ நிஷாந்த வர்ணசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘அன்று வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்த நிலங்களில் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அக்காணிகளுக்கான உறுதிகளும் அவர்களது பெயர்களுக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிட்டார்.
அத்துடன், ‘இதற்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போதும் அங்கு வாழ்ந்த சுமார் 150 சிங்கள குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடினோம். இதன்போது, அச்சிங்கள குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்க அதிபரும் எம்மிடம் உறுதியளித்தனர்.
ஆனால், அவர்களின் அந்த உறுதிமொழி இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல வடக்கின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெளியேறிய சிங்களவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும்’ என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக