19 மார்ச் 2013

மாணவர் போராட்டம் சாதாரணமானதல்ல-அமெரிக்கா

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாகக் கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனாஹே தெரிவித்தார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக 8 ஆவது நாளாகவும் தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் பேரெழுச்சி கொண்டுள்ள நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து அமெரிக்கத் தூதுவரிடம் ஜெனிவாவில் வைத்து "உதயன்' வினவியது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத்து கருத்து வெளியிட்ட அவர், தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டத்தை சாதாரணமான ஒரு விடயமாக கருதி விட முடியாது என்றும் கூறினார்.
"கோடிக்கணக்கில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் ஒரு போராட்டத்தை இலேசான விடயமாக கருதிவிட முடியாது. அது அமெரிக்கா இங்கு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் தாக்கங்களை ஏற்படுத்துமென நான் கருதுகிறேன் என்றும் டோனஹே அம்மையார் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை விடயம் குறித்தான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுமா, இல்லையா என்ற கேள்வி நிலவிவரும் இவ்வேளையில், இதுகுறித்து இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக