06 மார்ச் 2013

ஒரு பக்கம் போர்க்குற்றச்சாட்டு, மறுபக்கம் போர்ப்பயிற்சி – அமெரிக்காவின் இரட்டைமுகம்?

US-SL-train-2சிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகளை வலியுறுத்தி வரும் அமெரிக்கா, இன்னொரு பக்கத்தில் சிறிலங்கா படையினருக்கு தொடர்ந்து பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் படை அதிகாரிகள் குழுவொன்று சென்ற மாத நடுப்பகுதியில், வவுனியா பிரதேசத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகளை அளித்துள்ளது.
பூ ஓயாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு முகாமில் இந்த கூட்டுப்பயிற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 18ம் நாள் தொடக்கம் 22ம் நாள் வரை இடம்பெற்ற இந்தப் பயிற்சியில், சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல், மருத்துவப்படைப் பிரிவு மற்றும் ஆயுத தளபாட தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் 18வது மருத்துவப் படைத்தலைமையகம், பசுபிக் விமானப்படை, பசுபிக் பிராந்திய பொதுசுகாதார தலைமையகத்தின் மிருக மருத்துவ நிபுணர்கள், 8வது அரங்க உதவித் தலைமையகத்தின் வெடிபொருள் நிபுணர்கள் சிறிலங்கா படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
கண்ணிவெடிகளை அகற்றுவதை மையப்படுத்தியே இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் சிறிலங்கா அரசாங்கமோ, இராணுவமோ இதுபற்றி எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக