12 மார்ச் 2013

பற்றி எரிகிறது தாய் தமிழகம்!

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் என்றும் இலங்கை அரசுமீது தமிழர் படுகொலைக்கான போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம், வீதி மறியல் போராட்டங்கள் காரணமாகப் பற்றி எரிகிறது தமிழகம்
முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த லொயோலாக் கல்லூரி மாணவர்கள் 8 பேரையும் தமிழகப் பொலிஸார் நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரெனக் கைது செய்ததை அடுத்தே தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மேலும் 27 மாணவர்கள் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல்கள் தமிழகம் எங்கும் வலுத்து வரும் நிலையில் மாணவர்களின் இந்தப் போராட்டங்கள் அங்கு பெரும் கொந்தளிப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
மாணவர்கள் அனைவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்தப் போராட்டங்களால் தமிழக அரசும் மத்திய அரசும் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொலிஸார் மாணவர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது அவை பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழ் இனப் படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதம் மற்றும் வீதி மறியல் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
லொயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்தனர். இந்த மாணவர்களுக்குத் தமிழகம் முழுவதும் மாணவர்களின் ஆதரவு வலுத்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் நேற்று முன் தினம் நள்ளிரவிலேயே லொயோலாக் கல்லூரி மாணவர்கள் 8 பேரையும் கைது செய்து வலுக்கட்டாயமாகப் பொலிஸார் போராட்டத்தைக் கலைத்தனர்.
இருப்பினும் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் லொயோலாக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். திருச்சி சென். ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள், காரைக்குடி அழகப்பா கல்லூரி, ஆனந்தா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், மன்னார்குடி என ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக