01 மார்ச் 2013

தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்: சந்திரிக்கா

20130228-201714.jpgவெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்களால் நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
விஜய குமாரதுங்கவின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இந்தக்கூட்டம் இடம் பெற்றது.
விஜய குமாரணதுங்கவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்து விட்டு அங்கு அவர் உரையாற்றுகையில்,
நாட்டை ஆட்சி செய்யும் அனைவரும் இன்று நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்துவதற்கு முயற்சிப்பது இல்லை. வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்கள் மற்றும் மனிதர்களை மரத்தில் கட்டி வைத்து தண்டிப்பவர்களால் நாட்டில் நல்லாட்சியை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
எல்லோரும் நினைக்கினறார்கள் ஹொரகொல்லையில் எங்களுக்கு பாரிய சொத்துக்கள் உள்ளன என்று. எங்களுக்கு 4000 ஆம் எக்கர் காணிகள் அங்கு இருந்தன. 1956 ஆம் ஆண்டு எனது தந்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்து பாதுகாப்பதற்கு 500 ஏக்கர் காணியை விற்றார்.
பின்னர் எனது தாயும் எங்களை வளர்ப்பதற்கு காணிகளை விற்றார். எனது தாயாரே கொண்டுவந்த சட்ட மூலம் ஒன்றின் பிரகாரம் எங்களுக்கு சொந்தமான 3000 ஆம் ஏக்கர் காணியை அரசுக்கு வழங்கினார். எனக்கு மிகுதியானது 200 ஏக்கர் மட்டுமே.
நான் ஜனாதிபதி பதவியை துறந்ததன் பிறகு ஐந்து முறை காணியை விற்றுள்ளேன். எனக்கு வேரு எந்த ஒரு வருமானமும் இல்லை என்பதனை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
நான் ஜனாதிபதியாக இருந்த போது எனது இரு பிள்ளைகளுக்கும் ஒரேயொரு வாகனம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் பயணம் சென்றால் அவர் வரும் வரை மற்றவர் காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இருவரும் சேர்ந்து போக வேண்டும். ஆனால் இன்று ஒருவரும் 11 வாகனங்கள்;, மற்றவருக்கு 12 வாகனங்கள் இன்னுமொருவருக்கு 15 வாகனங்கள் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களில் படித்தவர்கள் கைவிரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட இல்லை. மிகவும் குறைந்த படிப்பின் மூலமும் குறைந்த முயற்சியின் மூலமும் ஆகக்கூடிய பணத்தை சேர்த்துக் கொள்ளக் கூடிய துறையாக இன்று நாடாளுமன்ற அங்கத்தும் காணப்படுகிறது.
விஜய சிறைக்கு செல்லும் போது எனது மகனுக்கு மூன்று மாதங்கள். அப்போது பால் மா வாங்க கூட ஐந்து சதம் இருக்க வில்லை.
அந்தநேரம் மேர்வின் சில்வாவின் குடும்பமும் எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தன. மேர்வின் சில்வாவும் சிறையில் இருந்தார். இவர்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்காக ஐந்து சதம் கூட யாரிடமும் கேட்க வில்லை. எங்கள் காணியில் இருந்த மரங்களை விற்று அவர்களை நான் காப்பாற்றினேன்.
நான் ஜனாதிபதியாக இருந்த போது எனக்கு சொந்தம் இல்லாத ஐந்து சதத்தைக்கூட நான் எடுத்தது இல்லை. அதே போன்று எனது அரசாங்க அங்கத்தவர்களையும் இயன்ற அளவு அதிலிருந்து தடுத்தேன். ஆனால் இன்றைய நிலைமை மாறி விட்டது.
நாட்டின் ஆட்சியை பற்றி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பெருமளவு கற்பழிப்பு செய்பவர்கள் அரச தரப்பு கிராமிய மட்ட உறுப்பினர்களாக இருக்கின்றனர்
இவைகளை தடுப்பதற்கு கூட அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக