28 மார்ச் 2013

தமிழக சட்டமன்ற தீர்மானத்தால் பாராட்டு மழையில் நனைகிறார் முதல்வர்!

ஈழத் தமிழர்களுக்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகள் குவிகிறது.
இதுபற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து:-

தா.பாண்டியன், (இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர்)
இலங்கை மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கை ஈழத் தமிழர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமைந்துள்ளது.
மிகவும் துணிவுடன் மத்திய அரசிடம் வாதாடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதிலும் வெற்றி கிட்டும். அவரது தீர்மானம் வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தும்.

வைகோ, (ம.தி.மு.க. பொதுச் செயலாளர்)
இலங்கை தமிழர்கள் நலன் கருதி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்- அமைச்சர் நிறைவேற்றிய தீர்மானம் வரலாற்று சிறப்புக்குரியது.
சுதந்திர தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இதே தீர்மானத்தை இந்திய பாராளுமன்றமும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம் அதை செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். தீர்மானத்தை, நிறைவேற்றிய தமிழக சட்டசபைக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், மற்றும் ம.தி.மு.க. சார்பில் பாராட்டுதலை தெரிவிக்கிறேன்.

டாக்டர் ந.சேதுராமன் (மூவேந்தர் முன்னணி கழக தலைவர்)
ஐ.நா. சபையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து இரட்டை வேடம் போட்ட காங்கிரஸ் ஓட்டு மொத்த தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியது. காயம்பட்ட தமிழர் இதயங்களுக்கு மயிலிறகால் வருடுவது போல் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம். ஆயிரம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வரலாற்றில் நீடித்து நிற்கும்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா காவிரி உரிமையை பெற்றுத் தந்தது போல நாளை கச்சத்தீவு மட்டுமல்ல, தமிழீழம் பெற்று தருவார். அதற்கான துணிவுடமையும், அறிவுடைமையும் இரண்டற கலந்த வீரப்பெண்மணி அவர்.

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)
உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் ஈழப் பிரச்சினையில் என்ன நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டும் என்று சிந்திக்கிறானோ அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக தமிழ் சமுதாயமே அவருக்கு துணை நிற்கிறது.

வேல்முருகன், (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்)
நட்புநாடு என்று நாடகமாடி இனப்படுகொலை நடத்தும் இலங்கையின் முகமூடியை கிழிக்க, தமிழீழம் அமைய இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்யாத, செய்யத் துணியாத நடவடிக்கைகள் தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் நடந்துள்ளது. இனமுழக்கங் களை வழங்கிய தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறோம்.
தமிழர் உரிமை காக்க முதல்- அமைச்சர் எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் தன்னெழுச்சியான மாணவர்களின் எழுச்சி மற்றும் பொதுமக்களின் திரட்சி ஒரு புத்தொளியை தமிழினத்திற்கு தரும் என நம்புகிறோம்.

அருள்தாஸ் (தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர்)
தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு பிறகாவது மத்திய அரசு தமிழர்கள் மீது அக்கறை கொண்டு ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க, தனிஈழத்தை உருவாக்க உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும்.
இதே போல் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழ் சமுதாய அமைப்பினர், மாணவர் அமைப்பினர் பலர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக