04 மார்ச் 2013

ராஜபக்சேவுக்கு ஆதரவாக தமிழக போலீசா?

சேலம் மத்திய தலைமை தபால் நிலையம் முன் சேலம் மாவட்ட தமிழின உணர்வாளர்கள் ஒரிங்கிணைப்பு குழுவினர் இன்று (04.03.2013) காலை 10 மணியளவில் குவிந்தனர். சிங்கள இனவாத ராஜபக்சே அரசை கண்டித்தும், கொலைகார கொடியவன் ராஜபக்சேவை உலக நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க கோரியும் உணர்வாளர்கள் கருப்பு கொடியுடன் திரண்டனர்.
கூட்டத்தில் பெரும்பாலான இடத்தில நக்கீரனின் வந்த பாலச்சந்திரன் அவர்களின் அட்டை படத்தை உயர்ந்த தட்டிகளாக தூக்கி பிடித்து இருந்தனர் உணர்வாளர்கள். அறப்போர் நடத்திய அவர்கள் பேசும் போது,
'12 வயது சிறுவன் என்றும் பாராமல் பாலச்சந்திரன் அவர்களை மார்பில் சுட்டு கொன்றுள்ளது இனவாத கொடூர ராஜபக்சே ராணுவம். இந்த கொடூரத்தை விளக்கி மனித குளத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பவும், நீதி கேட்கவும், கொலைகார கொடியவன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றவும் சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை கோரியும், சுதந்திர தமிழீழம் கோரியும், ஜெனீவா ஐ.நா மன்றத்திற்கு முன் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் இன்று அறப்போர் நடத்துகிறார்கள். அதையொட்டி தான் நாங்களும் இங்கு நடத்துகிறோம். நம் நியாயங்கள் வெல்லும் வரை பல்வேறு வழிகளில் போராடுவோம்' என்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.வான தமிழக வாழ்வுரிமை கட்சியின் காவேரி பேசும் போது, 'காங்கிரசை இனி இல்லாமல் செய்வோம் ஒரு காங்கிரஸ்காரன் கூட தமிழகத்தில் இருக்க கூடாது. சோனியா இந்த தமிழகத்திற்கோ ஏன் இந்தியாவிற்கோ சொந்தகாரர் அல்ல ராஜீவ் காந்தியை காதலித்து வந்த இத்தாலிக்காரர் ஆனால் எம் இனத்திற்கு எதிராக உள்ளார் 'என பேசி கொண்டு இருக்கும் போதே காவல்துறையினர் 'ஒருமையில் பேசாதீர்கள் மத்திய அரசை கண்டித்து பேச வேண்டாம் 'என தடுத்தனர்.
'தமிழ்நாட்டில் தமிழனுக்காக கூட பேச கூடாதா? கேரளாவில் இத்தாலி நாட்டுக்காரன் ரெண்டு பேர் மீனவனை சுட்டார்கள் என அங்குள்ள காவல்துறை அவர்களை கைது செய்தது அதே இங்கு தமிழக காவல்துறை தமிழனுக்கு எதிராக இருக்கிறது ராஜபக்சேவை ஆதரிக்கிறது தமிழக காவல்துறை' என உணர்வாளர்கள் பேச 'இப்படி எல்லாம் பேச கூடாது உங்களை எல்லாம் கைது செய்கிறோம்' என இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி ஒருவர் கை பிடித்து இழுக்க உணர்வாளர்களோ கொந்தளித்துவிட்டனர்.
'இந்த இனத்திற்காக 12 வயது பாலச்சந்திரன் உயிரை கொடுத்துவிட்டான் எனக்கு 60 வயது இந்த உயிர் இருந்தால் என்ன போனால் என்ன' என காவேரி கோபமாக பேசி காவல்துறையை கண்டிக்க அந்த இடம் பரபரப்பானது.
பழைய பேருந்து நிலையம் அருகேயே இது நடந்ததால் கூட்டம் கூட தொடங்கிவிட்டது. உணர்வாளர்கள் சிலர் 'தமிழக காவல்துறை ஒழிக தமிழீழம் வெல்க' என முழக்கமிட நிலைமை சீரியசானது. அதன் பின் வேக வேகமாக உணர்வாளர்கள் அனைவரையும் கைது செய்தது காவல்துறை.ராஜபக்சேவை கண்டிக்க தொடங்கிய ஆர்பாட்டம் தமிழக அரசின் காவல்துறையால் திசை மாறி ஆளும் கட்சியை கண்டித்த கூட்டமாய் முடிந்து போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக