23 மார்ச் 2013

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு பிரயோசனமற்றது!

ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றுப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இத் தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயற்பாடு என்பதால் தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஜ.நா மனிதவுரிமை கூட்டத் தொடரில் உரையாற்றி நாடு திரும்பியுள்ள அவர் இன்று நண்பகர் யாழ்.இராசாவின் தோட்ட வீதியில் உள்ள யாழ்.ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இச் சந்திப்பில் ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
அமெரிக்காவால் ஜ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் என்று சொல்லப்படும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி எந்தவிதத்திலும் சொந்தம் கொண்டாடவில்லை.
ஏனெனில் தமிழ் மக்களை ஏமாற்றி அழிவின் பாதையில் கொண்டு செல்ல நாம் ஒருபோதும் தயாராக இல்லை. இத் தீர்மானத்தை நாம் எதிர்ப்பதற்கு காரணங்கள் உள்ளது.
கடந்த வருடமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்க அரசாங்கம் தனக்கு விசுவாசமானவர்களால் தனது யுத்தக் குற்றத்தை மூடி மறைப்பதற்காகவும், சர்வதேச விசாரணையில் இருந்து தப்பிக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையினையே முன்வைக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தாயரிக்கப்பட்ட அறிக்கையினை நடைமுறைப்படுத்த ஒருவருட கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒரு வருட கால அவகாசத்திற்குள் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக மோசமானதாகும்.
குறிப்பாக தமிழ் மக்களுடைய காணிபறிப்பு, பல்கலைக்கழகங்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் உச்சம், மீள்குடியேற்றம் என்னும் போர்வையில் மக்கள் காடுகளுக்குள் தள்ளிவிடப்பட்டது மற்றும் புணர்வாழ்வு அழிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான விடையங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாமலும் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையினை கைவிடப்பட்டும் உள்ளதாக இம்முறை அமெரிக்காவல் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் எந்தவிதமான பிரியோசனம் இல்லா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் மூலமாக 13 ஆவது திருத்தத்துடன் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நாம் இத் தீர்மானத்தை முழுமையாக எதிர்க்கின்றோம்.
எமது தழிழ் இனம் அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பிற்குப் அப்பால் சர்வதேசத்தில் தலையீட்டுடன் அல்லது சர்வதேசத்தின் முழுப் பார்வையில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றும் இங்கு நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக