02 நவம்பர் 2013

பெண் கொலை தொடர்பில் சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

newsநாச்சிமார் கோவில் தேர் முட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உடலில் அடிகாயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மானிப்பாயைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். டி.என்.ஏ பரிசோதனைக்காக அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள கன்னியர் மடத்தில் தங்கியிருந்துள்ளார். கடந்த 3ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் அவரது உறவினர்களால் 4ஆம் திகதி யாழப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மாதம் 17ஆம் திகதி நாச்சிமார் கோயிலில் உள்ள தேர்முட்டியில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 35 வயதுடைய யோகராணி என்பவராவார். எனினும் குறித்த பெண் பாலியல் வல்லுறவிற்கு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.பெண்ணின் கொலை தொடர்பில் 6 பேரின் வாய்மொழி முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பெண் தங்கியிருந்த விடுதியில் இருந்து அவர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றனர் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக