27 நவம்பர் 2013

வடக்கின் மாவீரர் தின நிகழ்வுகள் ஒரே பார்வையில்!

வடமராட்சி கிழக்கின் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்:
வடமராட்சி கிழக்கின் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலில் படையினரது மினிமுகாம் ஒன்று அமைந்துள்ள நிலையில் அதனை தாண்டி சென்ற இளைஞர்கள் சிலரே சுடரேற்றியதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தையடுத்து அங்கு குவிக்கப்பட்ட படையினர் வீதியால் பயணித்த பொதுமக்கள் மீது சகட்டு மேனிக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இரு இளைஞர்கள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

கட்டைக்காடு பொது விளையாட்டரங்கு:
இதனிடையே கட்டைக்காடு பொது விளையாட்டரங்கிலும் மாலை மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் குவிந்த படையினர் வீடுகள் தோறும் பொருத்தப்பட்ட மின்குமிழ்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம்:
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாணசபை அங்கத்தவர் துரைராசா ரவிகரன் மாவீரர் குடும்பங்கள் சகிதம் மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். தனிப்பட்ட இடமொன்றில் இந்நிகழ்வை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகம்:
இதேவேளை கடுமையான கெடுபிடிகள் அமுல்படுத்தப்பட்டிருந்த போதும் அதனையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் தூபிப்பகுதியில் இன்றிரவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளவினுள் அத்துமீறி அருகாகவுள்ள மதில் தாண்டி சென்றிருந்த மாணவர்கள் குழுவொன்றே சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தை சூழவும் நுளைவாயில்கள் தோறும் படையினர் காத்திருக்க சத்தமின்றி மதில் தாண்டி சென்றே சுடரேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

வைத்தியசாலையின் உயர்ந்த கட்டடத்தில் சுடரேற்றப்பட்டது:
யாழ்.குடாநாட்டில் மாவீரர் தின சுடரேற்றும் நிகழ்விற்காக படைத்தரப்பு யாழ்.பல்கலைக்கழக சூழலில் காத்திருக்க நகரின் மத்திய பகுதியான யாழ்.போதனாவைத்தியசாலையின் மிகவுயரமான கட்டிடத்தில் இன்று மாலை ஆறு மணியளவில் ஈகைச் சுடரேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொது வைத்தியசாலையின் மேல் மாடியில் தீபம் சுடர்விட்டு பிரகாசமாக ஒளிவீசியதை அறிந்து அங்கு சென்றிருந்த படையினர் செய்வதறியாது திணறியதைக் காண முடிந்தது என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு உச்சம் பெற்றிருப்பதாக நம்பப்படும் யாழ்.நகரின் மையத்தில் சுடரேற்றப்பட்டமை பாதுகாப்பு தரப்பை கடுமையான கோபாவேசத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளையும் படைத்தரப்பு தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த போதிலும் யாழ். போதனா வைத்தியசாலையின் மேல் மாடியில் சுடர் ஏற்றியுள்ளமை படைத்தரப்பிற்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்தப் பகுதியை படைப் புலனாய்வாளர்கள் சல்லடையிட்டிருப்பதாகவும் வைத்திய சாலை தரப்புக்கள் தெரிவித்தன.

இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன:
இதனிடையே படையினரது தடைகளை தாண்டி இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் மணிகள் தொடர்ச்சியாக ஒலிக்க வைக்கப்பட மறுபுறத்தே மக்கள் வீடுகள் தோறும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வன்னியில் கடும் கண்காணிப்பிலும் எரிந்தன விளக்குகள்:
வன்னியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இராணுவத்தினர் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வீதிகளில் இராணுவத்தினர் அதிகளவுகளில் காணப்பட்டதுடன் அதிரடியாக சில வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்தினர்.
பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முற்றுகைகளையும் மீறி மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றப்பட்டதுடன் மரங்களும் நாட்டப்பட்டன.
உரிமை மீட்கச் சென்ற பிள்ளைகளை நினைவுகூறும் உரிமைகூட மறுக்கப்பட்டிருப்பதாக தாய்மார்கள் கண்ணீர் விட்டனர்.
ஆலயங்களின் மணிகள் எழுப்பட்டதுடன் சில அறிவிக்கப்படாத பொது இடங்களிலும் மாவீரர் நினைவாக தீபம் ஏற்றப்பட்டது.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் இன்று முழுவதும் ஒரு வித மௌன நிலை காணப்பட்டது.

நன்றி:குளோபல் தமிழ் செய்திகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக