08 நவம்பர் 2013

புத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் காதலனாலேயே கொலையுண்டார்!

யாழ். புத்தூர் கிழக்கில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அவரின் காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. யாழ். புத்தூர் கிழக்கு பருத்தித்துறை வீதியில் கடந்த 29ஆம் திகதி 27வயதுடைய அமிர்தலிங்கம் மைதிலி என்ற பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவிக்கையில்,
மகள் கடந்த 28ஆம் திகதி இரவு 7 மணிவரை வீட்டில் தொலைகாட்சி பார்த்து கொண்டு இருந்தார். அவ்வேளை அவரது கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது அவர் அதில் உரையாடிக்கொண்டே வெளியில் சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாக அவரை காணாததால் நாம் அன்று இரவு முழுக்க தேடினோம். அவரை காணவில்லை. அதன் பிறகு காலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம்.
பின்னர் மதியம் ஒரு மணியளவில் எங்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணற்றில் மகள் சடலமாக கிடப்பதாக அயலவர்கள் கூறினார்கள் என தெரிவித்தார். அப்பெண்ணின் கைத்தொலைபேசிக்கு இறுதியாக வந்த அழைப்பு அவரின் காதலனிடமிருந்தே வந்துள்ளது என பொலிஸார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரின் காதலனான அமிர்தலிங்கம் கிருஷ்ணதீபன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணைகளில் அன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் காதலியை அழைத்ததாகவும் இரவு வாசிகசாலைக்கு அருகில் இருந்து பேசிக்கொண்டிருந்தாகவும் அவரிடம் உடலுறவு கொண்டதாகவும் இதன் பின்னர் தன்னை திருமணம் முடிக்குமாறு அப்பெண் கேட்டதால் அவரை கிணற்றில் தள்ளிவிழுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நபர் இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது இவரை 14நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக