24 ஏப்ரல் 2013

மணல் அள்ள சென்ற மக்கள் மீது படைகள் தாக்குதல்!

முல்லைத்தீவு, மாந்தை மணல் எடுக்கச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களின் சாரதிகளும் பொது மக்களும் சிராட்டிக்குளம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்திய அரசின் நிதி உதவியுடன் கிடைக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்காக உதவி அரசாங்க அதிபரின் அனுமதியோடு சிராட்டிக்குளம் பறங்கி ஆற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மணல் எடுக்கச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களின் சாரதிகளும் பொது மக்களுமே இவ்வாறு சிராட்டிக்குளம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பறங்கி ஆற்றில் நேற்று மணல் அள்ளச் சென்றோர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அங்குள்ள வீட்டு வேலைக்குத் தேவையான மணலை இனிமேல் எடுத்துவர மாட்டோம் என உளவுயந்திர சாரதிகள் மறுத்துவிட்டனர்.
இதனால் இப்பகுதியில் வீட்டுத்திட்ட வேலைகள் இடைநிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளது.
இதே நேரம் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள ஒப்பந்தக்காரர்களால் அமைச்சர்களின் செல்வாக்குடன் வியாபார நோக்கில் தேவையான கிறவல், மணல் மற்றும் மரம் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன.
இது குறித்துப் படையினர் பாராமுகமாகச் செயற்படுகின்றனர்.
வடக்கில் இராணுவமானது சகல சிவில் நிர்வாகங்களிலும் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நான்கு வருடங்களின் பின்பு தமக்குக் கிடைத்த வீடுகளைக்கூட கட்டிமுடிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.
இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதுடன் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது வீட்டினைக் கட்டுவதற்குத் தேவையான மணலை அனுமதியுடன் அள்ளவும் பாதுகாப்பான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திரு. வேதநாயகத்திடம் தான் கேட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக