18 ஏப்ரல் 2013

சிறுபான்மை மக்கள் அனுபவித்த சுமையை இன்று சிங்கள மக்களும் அனுபவிக்கின்றனர்!

அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களாக நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி தனது ஆட்சியை கொண்டு நடத்தியது ஆனால் அதன் பிரதிபலிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
இலங்கை உலக நாடுகளிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் இன்று அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன.
யுத்தம் நிறைவடைந்து நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாக கூறப்படுகின்றது. ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ள எந்தப் பரிந்துரையையும் அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
அதன் பிரதிபலிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன அதிலொன்று தான் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உதவித் தொகையில் 20 வீதக் குறைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய உலக நாடுகளும் எமது நாட்டுக்கு எதிராக இவ்வாறு செயற்படுமேயானால் அரசாங்கம் அல்ல நாட்டு மக்களே பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
ஆரம்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களே இவ்வாறான சுமைகளை தாங்கினர். ஆனால் தற்போது சிங்கள மக்களும் இச் சுமையை சுமக்க தள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக