21 ஏப்ரல் 2013

நல்லிணக்கம் குறித்துப் பேச பாலிதவுக்கு என்ன அருகதை?சுரேஷ்

சுரேஷ் பிரேமச்சந்திரன் 
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு எதிர்மறையாக அந்த மக்களை அழித்தொழிக்கும் வகையில் செயற்படும் இந்த அரசுக்கோ,பாலித கொஹன்னவுக்கோ நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.இவர்கள் இனவாதத்திமிரில் பேசுகின்றனர்.
இதனால் புரிந்துணர்வு ஒருபோதும் உருவாகாதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
“குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை’என்று ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாகக் கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகளை விசாரணைகள் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் வைத்திருக்கிறீர்கள்.தொடர்ந்து இவர்களை தடுத்து வைத்திருப்பதன் மூலம் நல்லிணக்கம் வரும் என்று பாலித எண்ணுகின்றாரா?
கைது செய்த சரணடைந்த பலரின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது. இது பற்றி அரசு மௌனமாக உள்ளது.குறைந்தபட்சம் அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா?அல்லது இல்லையா என்று கூடச் சொல்லாமல் நல்லிணக்கம் பற்றிப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.
போர் முடிந்து 4ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அரசு என்ன செய்துள்ளது?
தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்வது,பௌத்த கோயில் அமைப்பது,காணிகளை அடாத்தாகப் பிடித்து இராணுவ முகாம் அமைப்பதுதான் நல்லிணக்கத்தின் வெளிப்பாடா?என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக