22 மே 2012

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட முடியாது!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாணசபை உறுப்பினராகவோ பதவியேற்க முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
ஆனாலும்,இலங்கையின் அரசியலமைப்பின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவோ அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது. பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது.
அவரது சிறைத்தண்டனை குறைக்கப்படவில்லை. அவரது சிறைத்தண்டனைக்காலம் குறைக்கப்பட்டால் தான் அரசியலில் ஈடுபட முடியும். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சரத் பொன்சேகாவின் குடியியல் உரிமைகளை முழுமையாக மீளப்பெறுவதற்கு அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப் போவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்று குடியியல் உரிமைகளை இழந்தாலும் கூட, அவற்றை மீளவழங்கும் வகையில் ஒருவருக்கு முழுமையான பொதுமன்னிப்பு அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த தற்போதைய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்தகைய பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
ஆனால் அத்தகைய முழுமையான பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக