13 மே 2012

வன்னியில் பலியானோருக்கு வவுனியாவில் வணக்க நிகழ்வுகள்!


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியாக் கிளையினர் மேற்கொண்டுள்ளனர். வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. உயிர் நீத்த அனைவரதும் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்தினரின் துயரங்கள் நீங்கி சுபீட்சமாக வாழவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன “எமது இறைமையை, வாழ்வுரிமையை அழித்தொழிக்கும் நோக்கில் மானிடமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் இன்னமும் அவர்களது இரத்த உறவுகள் அவர்களுக்கான இறுதிக்கிரியைகளை செய்யமுடியாமல் தவிக்கின்றனர். உயிர் நீத்தவர்கள் அனைவரது ஆத்மாக்களும் சாந்தியடையவும், மரணித்தவர்களின் குடும்பங்களின் துயரங்கள் நீங்கி சுபீட்சமான வாழ்வு வாழவும் நாம் அனைவரும் கூட்டாக அஞ்சலி செலுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி வாழ் மக்கள் அனைவரையும் அழைக்கிறது என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டக்கிளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக