14 மே 2012

சிறீலங்கா தொடர்பான விவாதம் ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது!

சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கிளப்‘ இந்த விவாத நிகழ்வை வரும் 16ம் நாள் மாலை 7 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் சிறிலங்காவில் மரணமாக காரணமாக அமைந்த - 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளும், அதற்கு எவ்வாறு பதிலளிக்கவுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ‘புரொன்ட்லைன் கிளப்‘ தெரிவித்துள்ளது.
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும், பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களையும் ஏனைய கொடூரங்களையும் இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ குறிப்பிட்டுள்ளது.
பிபிசியில் ‘ஹாட்ரோக்‘ நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்குவார்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிசும் ஒரு பேச்சாளராக் பங்கேற்பார் என்று ‘புரொன்ட்லைன் கிளப்‘பின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து பங்கேற்பார் என்று தெரியவருகிறது.
இந்த நிகழ்வுக்கான ஆசனப்பதிவுகள் முடிவடைந்து விட்டதாகவும், இதனைப் பார்க்க விரும்புவோர் http://www.ustream.tv/frontlineclub என்ற இணையத்தளம் மூலம்  நேரலையாகப் பார்க்கலாம் என்றும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக