20 அக்டோபர் 2012

சிங்களப்படைகளின் பாதுகாப்புக்கு தமிழ் போராளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என்ற போர்வையில் சமுகப் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை படையினர் தமது முகாம்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், கைவேலி, போன்ற கிராமங்களிலிருந்து 250 முன்னாள் பெண் போராளிகளும் , 100 முன்னாள் ஆண் போராளிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஆக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு 6மாதங்கள், 10ஆயிரம் ரூபா சம்பளத்துடன், கிராம மட்டத்தில் இடம்பெறும் சமூக, கலாச்சார பிறழ்வுகளை தடுப்பதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்குமான உரிமை வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களுக்கு இதுவரை அவ்வாறான உரிமைகள் எவையும் வழங்கப்படாத நிலையில் தற்போது கைவேலியிலுள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின், பாரிய படைமுகாமிற்கு முன்பாக காவல் கடமை வழங்கப்பட்டிருக்கின்றது.
காலையில் 8.30 மணிக்கு கடமைக்குச் செல்லும் இந்த பாதுகாப்பு ஊழியர்கள் மாலை 5மணிக்கே வீடு திரும்ப முடியும்.மேலும் இவர்களுக்கான வரவுப்பதிவுகளை படையினரே மேற்கொள்வதோடு, பணிக்கு வராவிட்டால் கடுமையான கேள்விகளும், தண்டனைகளும் கூட வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக