12 அக்டோபர் 2012

தமிழர்களுக்கு உதவ இந்தியா தயாராம்!

“இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்தியா எப்போதும் தயார்”இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்வாங்காது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தங்களிடம் உறுதியளித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி மற்றும் செல்வராசா ஆகியோர் சம்பந்தர் தலைமையில் புது தில்லி சென்றுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெல்லியில் இந்தியப் பிரதமருடன் ஆலோசனை நடத்திச் சென்ற பிறகு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
வியாழக்கிழமை மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினார்கள். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, மீள்குடியேற்றம், இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள், இந்தியாவின் பங்களிப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் விவாதிக்கப்பட்டன.
முன்னதாக,, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று வெளியுறவு அமைச்சர் தங்களிடம் கூறியதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக தெரிவித்தார் அவர். இந்தியாவி்ன் நிலைப்பாடு மற்றும் இந்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து கிருஷ்ணா தங்களுக்கு விளக்கியதாகவும், இந்தியாவின் முயற்சிகள் எதிர்பார்த்த பலனளிக்கவில்லை என்று கிருஷ்ணா தம்மிடம் கூறியதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான, தங்கள் தரப்பு முயற்சிகளையும், கருத்துக்களையும் கிருஷ்ணாவிடம் எடுத்துரைத்ததாக சம்பந்தர் கூறினார்.
தங்களது மக்கள் ஏமாற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும் நியாயமான அரசியல் தீர்வு காண்பதற்கு எல்லோரும் ஒத்துழைத்து, அந்தத் தீர்வைக் காணலாம் என்றால், அந்தப் பாதையில் செல்வதற்குத் தயார் என்றும் சம்பந்தர் கூறினார்.
இனப்பிரச்சனை தொடர்பில் இலங்கை அரசு பிரேரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் பொருத்தவரை, அதில் தமிழ்க் கூட்டமைப்பு இடம்பெற வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்படவில்லை என்று தெரிவித்த சம்பந்தர், அதே நேரத்தில் அதில் சேர மாட்டோம் என்று தாங்களும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டத்துடன் அதை ஆராயத் தயார் என்றும், ஆனால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் செல்ல தாங்கள் தயாராக இல்லை என்றும் சம்பந்தர் தெளிவுபடுத்தினார்.
‘தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அரசுக்கு ஏற்கெனவே தெரிவித்திருந்த போதிலும் அரசு இதுவரை அதற்கு பதில் தரவில்லை. இருதரப்பு பேச்சில் ஏற்படும் உடன்பாட்டை நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்குக் கொண்டு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அரசு நடந்துகொள்ளவில்லை. அதனால், நாடாளுமன்றக் குழுவில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஏமாற்றத்தில் முடியலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும், நியாயமான தீர்வை ஏற்படக்கூடிய நிலைமை இருந்தால் அதைப் பரிசீலிக்கத் தயார்’ என்றும் சம்பந்தர் கூறினார்.
அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தைப் பொருத்தவரை, நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி மக்களிடம் ஆலோசித்து பரிசீலிக்கத் தயார் என்றும் சம்பந்தர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக