20 அக்டோபர் 2012

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்த கொள்கை மாறாது!

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட்ரோம்னி வெற்றி பெற்று ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமா?
குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகள் குறித்தான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுமா என்றும் ஊடகமொன்று கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும்போதே, பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. கடந்த காலங்களை எடுத்துப்பார்த்தால் நிர்வாகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
எனவே, மிட்டோம்னி ஆட்சிக்கு வந்தாலும், இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கை அப்படியேதான் இருக்கும். யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறந்ததொரு இராஜதந்திரியாக நான் செயற்படுவேன் என்று குறிப்பிட்டார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்கர்களின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக