29 அக்டோபர் 2012

ஐ.நா.விசாரணையில் பா.ம.க.பங்கேற்கும்.

சிறீலங்காவில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐ.நா. அமைப்பு நடத்தும் விசாரணையில் பாமக பங்கேற்கும் என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக சிறீலங்கா ஆட்சியாளர்கள் மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சிறீலங்காவில் போருக்குப் பிறகும் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கபட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிபீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அக்டோபர் 22ம் நாள் தொடங்கி நவம்பர் 5ம் நாள் வரை நடைபெறும் காலமுறை மதிப்பீட்டாய்வு பணிக்குழுவின் 14 வது கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விசாரணையை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்கபட்டிருக்கிறது. இந்த விசாரணையின் போது இந்தியா நடுநிலையாக செயல்பட்டு சிறீலங்காவுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன்.
சிறீலங்காவுக்கு எதிரான விசாரணையின் முதற்கட்டமாக நாளை மறுநாள் நடைபெறும் விசாரணையில் மனித உரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளன.
அதைத் தொடர்ந்து நவம்பர் 1ம் நாள் சிறீலங்கா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி விசாரணை நடத்தபட்டு, அதன் முடிவுகள் நவம்பர் 5ம் நாள் அறிவிக்கபடவுள்ளன. என்னை நிறுவனராகக் கொண்டு செயல்படும் பசுமைத்தாயகம் ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவாக அங்கீகரிக்கபட்டிருப்பதால், இந்த விசாரணையில் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்பிற்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி நாளை மறுநாள் நடைபெறவுள்ள விசாரணையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி பங்கேற்று சிறீலங்கா மீது ஏன் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்? என்பதற்கான வாதங்களை முன்வைக்க உள்ளார். தொடர்ந்து நவம்பர் 1ஆம் நாள் நடைபெறவுள்ள விசாரணையில் ஜி.கே. மணியுடன் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர. அருளும் கலந்து கொள்கிறார்.
பின்னர், இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் பேரவையும் இணைந்து வரும் நவம்பர் 6ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் நடத்த விருக்கும் சர்வதேச மாநாட்டிலும் இந்த இருவரும் பங்கேகற்பார்கள்.
இந்த மாநாட்டிலும் சிறீலங்காவுக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும். சிறீலங்கா இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக, உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.
சிறீலங்கா போரின் போது போர்க்குற்றங்கள் இழைக்கபட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருப்பதால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெறும் சிறீலங்காவுக்கு எதிரான விசாரணையின் போது இந்தியா நடுநிலையுடன் செயல்பட்டு, சிறீலங்காவுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக