17 அக்டோபர் 2012

கோத்தபாயவின் அறிவிப்பு மிகவும் பயங்கரமானது!

News Service13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பதானது மிகவும் பயங்கரமான பாரதூரமான அறிவிப்பாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசியமொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டமும், 2002 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் ஒரே வகையானவை எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் இந்தக் கூற்றுக்கு தமிழ்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆகிய பௌத்த மேலாதிக்க அமைப்புகள் அவரின் கூற்றை வரவேற்றுள்ளன.
இந்த நிலையில், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாதுகாப்புச் செயலாளரின் கருத்து மிகவும் பயங்கரமான ஒரு அறிவிப்பாகும் என்பதை மட்டுமே என்னால் சொல்லமுடியும். இந்த ஒரு வார்த்தையில் அனைத்துப் பதில்களும் உள்ளன. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக