27 அக்டோபர் 2012

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கெதிராக கடும் யோசனை!

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக கடும் யோசனை ஒன்று முன்வைக்கப்படும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
தன்னிச்சையான சித்ரவதை முகாம்கள், கொலைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸிடம் இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்வியின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது, 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறியுள்ள ஹென்ஸ், இதற்காக விடியோ காட்சிகளை பயன்படுத்த எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில், நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடரில், தமது தரப்பு கருத்துக்களை வெளியிட பிரதிநிதி ஒருவருக்கு, குறைந்தளவான நேரமே வழங்கப்படும். இதனால், அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாக அதிக கவனத்தை செலுத்த தாம் எண்ணியிருப்பதாகவும் ஹென்ஸ் கூறியுள்ளார்.
கடந்த ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், கடந்தகால விடயங்கள் தொடர்பாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் வழிமுறை திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயற்படுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக