23 பிப்ரவரி 2012

சவேந்திர சில்வாவை கணக்கில் எடுக்காத ஆலோசனை கூட்டம்!

சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதிகாக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழுவில் இருந்து ஐநாவிற்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் நேற்று இடம்பெற்ற ஐ.நா செயலாளர் நாயகத்தின் அமைதிகாக்கும் படைப்பிரிவின் ஆலோசகர் குழு கூட்டத்தில் சவேந்திர சில்வா கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த ஆலோசகர் குழு கூட்ட அறையில் சவேந்திர சில்வா அமர்ந்திருந்த போதும் அவருடன் வேறு ஆலோசகர்கள் எவரும் உரையாடவில்லை என்பதோடு, எவ்வித ஆவணத்தையும் அவரிடம் கையளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய - பசுபிக் வலய நாடுகளால் ஐக்கியநாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவின் ஆலோசகர்கள் குழுவிற்குத் தெரிவு செய்யப்பட்ட சவேந்திர சில்வா, ஆலோசகர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என அக்குழுவில் உள்ள கனேடிய ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவில் சவேந்திர சில்வாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகரம் என்பன அவரது நியமனத்தை கேள்விக்குட்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்த நியமனம் தொடர்பில் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியிருந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை,போர்குற்றவாளியை எப்படி அமைதி காக்கும் படையின் ஆலோசகர் குழுவில் இணைத்தீர்கள் எனகேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் தாம் நியமனத்தை வழங்கவில்லை எனவும் ஆசிய நாட்டு நிறுவனங்களே அவரை நியமித்ததாகவும் அது குறித்து பொறுப்புக் கூற முடியாது எனவும் ஐநா செயலாளர் நாயகம் சார்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் குறித்த ஆலோசனைக் குழுவில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
ஆலோசகர் குழுவில் சவேந்திர சில்வாவின் பங்களிப்பு பயனுள்ளதாக, உதவியளிக்கக்கூடியதாக இருக்காது என ஐநா முன்னாள் பிரதி செயலாளர் நாயகமும் அமைதி காக்கும்படை ஆலோசகர் குழு தலைவருமான லூயிஸ் பிரச்செட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவேந்திரசில்வா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஐநா மனித உரிமை கண்காணிப்பகம் வரவேற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக