24 பிப்ரவரி 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வேயும் பிரித்தானியாவும் ஆதரவு.

ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரிட்டனும் ஆதரவு வழங்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத்திட்டமிட்டுள்ள தீர்மானத்தை பிரித்தானியாவும் ஆதரிக்கும் நிலை உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 'இலங்கையின் மனிதஉரிமைகள்'என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வருவது குறித்து அனைவருக்கும் தெரியும், அந்த தீர்மானத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.' என அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, இலங்கைக்கு எதிராக அமெரிக்க ஆதரவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நோர்வேயும் ஆதரவை வழங்கும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது காணாமல் போன உறவுகளை இன்னும் மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்று ஆப்டன்பொஸ்டன் நாளிதழுக்கு அவர் கருத்துரைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிப்பெற்றது. ஆனால் இன்னும் சமாதானத்தில் வெற்றிப்பெறவில்லை.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் சமாதானமாக வாழ்வதற்கான வழிமுறையை ஐக்கிய நாடுகள் சபை தேடியறியவேண்டும் என்று சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக