05 ஜூன் 2012

மஹிந்தவின் பயணத் திட்டம்! தமிழரிடம் இரகசியங்களை கசிய விட்ட ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிசார்?

மஹிந்தவின் பயணத் திட்டம்! தமிழரிடம் இரகசியங்களை கசிய விட்ட ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிசார்?லண்டன்- ஹீத்ரோ விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க புலம்பெயர் தமிழர்கள் ஒன்று கூடுவதை அறிந்து, அவரது பயணம் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் மதியம் 1.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வழக்கமாகப் புறப்படும் யுஎல்-503 விமானம் மூலம் லண்டனுக்குப் பயணிக்கவிருந்தார்.
இந்த விமானம் நேற்றுமுன்தினம் இரவு லண்டனை வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் – அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
ஹீத்ரா விமான நிலையத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க தமிழர்கள் தயாராவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பயணத்திட்டம் இறுதி நிமிடங்களில் மாற்றியமைக்கப்பட்டது.
இறுதிநேரத்தில் ராஜபக்சவின் பயணம் மாற்றியமைக்கப்பட்ட தகவலை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினரே புலம்பெயர் தமிழருக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் பயணத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியே கசிவதைத் தடுக்கும் வகையில் – உள்நாட்டுப் போரின் போது கையாளப்பட்டதைப் போன்று – கொழும்பில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் ஒருமுறை கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்தநிலையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் நேற்றுமுன்தினம் இரவே மிகவும் இரகசியமாக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச லண்டனில் எங்கு தங்கியுள்ளார் என்ற விபரம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டது.
ஆனாலும் சிறிலங்கா அதிபர் ஹில்டன் விடுதியில் தங்கியுள்ளார் என்பதையறிந்த புலம்பெயர் தமிழர்கள் ஹில்டன் விடுதிக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“சிறிலங்கா அதிபர் போர்க்குற்றவாளி”, “தமிழருக்கு நீதி வேண்டும்”, “தமிழருக்கு சுதந்திரம் வேண்டும்” என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பாக் லேனில் அமைந்துள்ள அந்த விடுதியின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் அதிகளவு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் தங்கலாம் என்று முன்னர் கருதப்பட்ட டோசெஸ்டர் விடுதிக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அங்கு அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.
ஹைட்பார்க் கார்டனில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே இரண்டு காவல்துறை கண்காணிப்பு நிலைகள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதாக சிறிலங்கா அரசதரப்பு விசனமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக