08 ஜூன் 2012

அதிர்ச்சி தரும் சிறிலங்காவின் போர்குற்றங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைத்துள்ள ஆதாரங்கள்!

தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ட்' ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் அவசியத்தினையே மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவில் இயங்கி வரும் சிறிலங்காவின் அரசியல், இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு, இக் காட்டுமிராண்டித் தனமான குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே, இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக காட்டுவதோடு, இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையில், இன்றைய தேவை சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக