19 ஜூன் 2012

ஐ.நா.கூட்டத்தொடரில் சிறிலங்கா விவகாரத்தில் அமைதிகாத்தார் நவநீதம்பிள்ளை!


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று தொடக்கவுரை நிகழ்த்திய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையோ அல்லது வேறு எந்த அதிகாரிகளோ சிறிலங்கா தொடர்பாக எதுவும் குறிப்பிடாதது குறித்து சிறிலங்கா அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம,
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முதலாவது நாள் அமர்வில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்தும், போருக்குப் பிந்திய நிலைமையின் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் சுருக்கமான விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மனிசா குணசேகர தலைமையிலான குழுவினர் பிந்திய நிலைமைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
இது ஒரு சுருக்கமான அமர்வு. வெறும் அரை மணிநேரம் மட்டுமே இந்த அமர்வுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாணத்தில் படைகளைக் குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஒரு விபரமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இந்தப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த நிலைமைகளை கணித்துக் கொள்வதற்கு இந்த அறிக்கை பேரவைக்கு உதவியாக இருக்கும்.
அதேவேளை, நேற்றைய அமர்வின் போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையோ அல்லது வேறு எந்த அதிகாரிகளோ தமது உரைகளின் போது சிறிலங்கா தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை.
இது மிகவும் நல்லது. ஆனால் இது முதல் நாள் மட்டும் தான். பேரவைக்கூட்டம் வரும் ஜுலை 6ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் நவிபிள்ளை தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை.
அதேவேளை இந்தப் பரிந்துரைகளில் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்குக் கடமைப்பட்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று ஒரு போதும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கோ அல்லது வேறு எவருக்குமோ சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி கொடுக்கவில்லை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக