15 ஜூன் 2012

புலம்பெயர் தமிழருக்கு அடிபணிவதா?சிந்திக்க வேண்டிய தருணம் என்கிறார் சிங்கள எம்.பி!

புலம்பெயர் தமிழரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிவதா? இல்லையா?“புலம்பெயர்ந்துள்ள தமிழர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதா இல்லையா என்று சிந்திக்கவேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதுகெலும்புடன் செயற்பட்டு வருகிறார். நாமும் அப்படித்தான் செயற்படுகிறோம். நாம் எதற்குப் பயப்படவேண்டும்?”
இவ்வாறு குறிப்பிட்டார் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
“புலம்பெயர் புலிகள் கொடுத்துவரும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதா இல்லையா என்ற கேள்வி எம்முன் எழுந்துள்ளது. அதனை உடனடியாகத் தீர்மானிக்கவேண்டிய வேளை வந்துவிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்றபோது புலம்பெயர் புலிகள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் நீதியான ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவில்லை.
ஜனாதிபதிக்கும், இலங்கைக்கு எதிராகவும் நடத்தப்பட்ட இவ்வாறான எதிர்ப்புச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் வரலாம். இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் உள்ள பயங்கரமான நிலைமையை பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறையினர் நன்கு உணர்ந்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. மூன்று தசாப்த கால யுத்தத்தை நிறைவுசெய்துவிட்டு நாம் அடுத்தகட்ட செயற்பாடுகளுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில், நாங்கள் ஏன் பயப்படவேண்டும்? புலம்பெயர் புலிகளுக்குத் தலைவணங்குவதா, இல்லையா என்பதை நாம் தீர்மானிக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த முதுகெலும்போடு செயற்படுகின்றார். நாங்களும் அப்படியே செயற்படுகின்றோம். எவருக்கும் அச்சப்படப்போவதில்லை” – என்றும் குறிப்பிட்டார் சஜின் வாஸ் எம்.பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக