06 ஜூன் 2012

காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு பிரதான வீதிகளில் பேரணி!

பொதுநலவாய நாடுகளின் செயலகத்தினை நோக்கி நடைபெற்றுவரும் பேரணி நடைபாதை வழியாக நகர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது லண்டன் மாநகரக் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வீதிகளில் இறங்கி பேரணியைத் தொடர்ந்து வருவதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது.
இதேவேளை மகிந்தரின் கொடும்பாவி லண்டன் நகரப் பகுதிகளில் கட்டி இழுத்துவரப்பட்டு முதலில் தூக்கில் இடப்பட்டது. பின்னர் தூக்கில் இருந்து இறக்கப்பட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டது. அத்தோடு இலங்கையின் சாசனமும், சேர்த்து எரிக்கப்பட்டு தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காட்டினர். பிரித்தானிய இராணி வரவிருப்பதால், தமிழீழக் கொடிகளை இறக்குமாறு பொலிசார் வற்புறுத்தியுள்ளனர், ஆனால் இளையோர்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பிரித்தானிய இராணி முன்பாகவே, தமிழீழக் கொடி காட்டப்பட்டது, பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.
எட்டுத் திசைகள் அதிர புலத்துப் புலிப்படைகளின் படையெடுப்பால் நடைபாதை கொள்ளதாக மக்கள் வெள்ளம் திரண்டுள்ளதால் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து பிரதான வீதிகளில் இறங்கி பேரணியை தொடரந்து வருகின்றனர்.
பேரணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவந்த லண்டன் காவல்துறையினர் கூட திரண்டு வந்துகொண்டிருக்கும் புலத்துப் புலிப்படையினை கண்டு செய்வது அறியாது திகைத்து நிற்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர்கள் அங்கிருந்து தற்போது தெரிவித்துள்ளார்கள்.
வெள்ளையினத்தவர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கின்றதால் ஏனைய வெள்ளையினத்தவர்கள் ஆர்வமுடன் அந்த துண்டுப்பிரசுரங்களை வாங்கிப் படிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு துண்டுப்பிரசுரங்களை வாங்கிய வெள்ளையினத்தவர்கள் சிலர் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றார்கள்.
இந்த அதிர்ச்சிகரமான எழுச்சி ஒருபக்கம் என்றால் லண்டன் மாநகர காவல்துறையினரின் முன்னேற்பாடுகளை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான விடையமாக உள்ளது.
கடந்த காலங்களில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பல்வேறு போராட்டங்களை பார்த்து அனுபவப்பட்ட லண்டன் மாநகரக் காவல்துறையினர் இன்று பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்து பல்வேறு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்துள்ளார்கள.
லண்டன் மாநகர காவல்துறையினர் நிகழ்விடத்து பிரதான வீதிகளுடனான போக்குவரத்தை நிறுத்தி வீதியின் ஒரு பகுதியை போராட்டத்திற்கு ஒதுக்கி சிறப்பான ஏற்பாடுகளை செய்து ஒத்துழைப்பினை செய்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்தி புலத்துப் புலிகளின் வீராவேசப் போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்கு முன்முயற்சிகளை எடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த சில நாட்களாக பிரித்தானிய வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அரங்கக் கூட்டம் முற்று முழுதாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இன்று மதியம் பொதுநலவாய நாடுகளின் செயலகத்திற்கு அருகாமையில் வந்துள்ள நாடுகளின் அதிபர்களிற்கான விருந்துபசார நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளது. அதனையும் தடுத்து புலத்துப் புலிகளின் எழுச்சியும் புரட்சியுமான போராட்டத்தின் காரணமாக பொதுநலவாய நாடுகளின் நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது அறியப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக