24 ஜூன் 2012

ஐ.நா . மனித உரிமைகள் சபையை இலங்கை மதிப்பதில்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை இலங்கை அரசு மதிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கையில் நடை பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் ஐ.நா. மனித உரிமைச் சபைக்கு இலங்கை அரசு உரிய பதில்களை வழங்குவதில்லை என ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் சபையின் 20 ஆவது கூட்டத் தொடரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபையின் சிறப்பு அறிக்கையாளர் குழுவே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை மீது சுமத்தியிருக்கிறது. நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 20ஆவது கூட்டத் தொடரில், கருத்துச் சுதந்திரம், சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பிலான மூன்று வெவ்வேறு அறிக்கைகள், ஐ.நாவின் சிறப்பு வல்லுநர்கள் குழுவினால் சமர்ப்பிக் கப்பட்டிருந்தன.
இதில் பல்வேறு நாடுகளிலும் உள்ள மனித உரிமை விவகாரங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இலங்கையின் பல்வேறு மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் அந்த நாட்டிடம் ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் ஐ.நா.சிறப்பு வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கை அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் அந்தக் குழு கூறியுள்ளது. ஐ.நாவின் சிறப்பு வல்லுநர் குழுவினால் சமர்பிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம், சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பிலான ஆய்வறிக்கையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கபட்ட விடயங்கள் வருமாறு:
* சம்பவம் 1 (2011ஆம் ஆண்டு) யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் நாளன்று, அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் அமைதியான கவன ஈர்ப்பு நிகழ்வொன்றுக்கு செல்ல முயன்றபோது தடுத்து வைக்கப்பட்டதும், மிரட்டப்பட்டதுமாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு.
* சம்பவம் 2 (2012 ஆம் ஆண்டு) அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குச் சென்றோர் மீது மிகையான பலப் பிரயோகம்பாவிக்கப்பட்டு அமைதியாகக் கூடுதலுக்கும், கருத்து வெளியிடுதலுக்கும் தேவையற்ற தடை விதிக்கப்பட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா விசேடஅறிக்கை அதிகாரி, அறிக்கைக் காலத்தில் தன்னால் அனுப்பப்பட்ட இரு அறிக்கைகளுக்கும் இலங்கை அரசிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனது கடமையைச் சரியாக செய்வதற்குத் தனக்கு பதில் அளிப்பது அவசியமென்றும், இலங்கை அரசை இயன்றளவு விரைவில் பதிலளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
யாராவது அமைதியான கூட்டங்களுக்கும், ஒன்று சேர்தலுக்குமான தமது சுதந்திரத்தை அமைதியான முறையில் நடைமுறைப்படுத்தும் போது அதை குற்றமயப்படுத்தாமலிருப்பதை அரசுகள் நிச்சயம் செய்து கொள்ளவேண்டியது அரசுகளின் கடமை என்பதை ஐ.நா. விசேட அறிக்கை அதிகாரி சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆயினும் அரசிடம் இருந்து இதுவரை அதற்குப் பதிலில்லை.
இலங்கை மக்கள் அமைதியான முறையில் கூடுதலுக்கும் ஒன்று சேர்தலுக்குமான மக்களின் உடல், உளரீதியான பாதுகாப்புத் தொடர்பாகத் தான் அக்கறை கொண்டிருப்பதாகவும் விசேட அறிக்கை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
கூடுதலுக்கும் ஒன்றிணைதலுக்குமான தமது சுதந்திரத்தை பாவிக்கும் மக்கள் மீது மீது மனித உரிமைகளை மீறி துன்புறுத்தல்களையோ அல்லது பயமுறுத்தல்களையோ செய்தவர்கள் குறித்து சுயாதீனமான, பூரணமான விசாரணை நடத்தப்படவேண்டும். அவற்றுக்குப் பொறுப்பானவர்களை அந்தப் பொறுப்பை ஏற்கவைக்க வேண்டும் எனவும் விசேட அறிக்கை அதிகாரி பரிந்துரைத்திருக்கிறார்.
இலங்கைக்குப் பயணம் செய்வதற்குகாகத் தான் 2011 செப்ரெம்பரில் இலங்கை அரசுக்கு அனுப்பி வைத்த கோரிக்கைக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்பதையும் விசேட அறிக்கை அதிகாரி ஞாபகமூட்டியுள்ளார்.
எனவே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் சபையினால் கேட்கப்படும் கேள்விகளை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
இதுவரை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என்று 20ஆவது அமர்வில் ஐ.நா. சிறப்பு வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக