20 ஜூன் 2012

பெண்களுக்கு படையினரால் பாலியல் அச்சுறுத்தல்!

இலங்கையில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்றும் வடக்கு கிழக்கு பெண் களுக்கு எதிராக மோசமான அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் சாசன அமைப்பு (ECCHR) குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது;
குறிப்பாக வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறி அடிக்கடி நடத்தும் உடல் சோதனைகளின் போது பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றன.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பிலான ஐ.நா.வின் சாசனம் இலங்கையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது குறித்தும்,வடக்கு,கிழக்குப் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் ஐ.நா. அமைப்பு தீவிர கவனம் செலுத்த வேண்டும். அங்கு நேரடியாக அல்லது மறைமுகமாகப் பெண்களைத் துன்புறுத்தக்கூடிய சகல சட்டங்களும் நீக்கப்பட வேண்டும். போரின்போது கைது செய்யப்பட்ட பெண்களின் தற்போதைய நிலை குறித்து அக்கறை கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. எனவே அந்தப் பிரகடனத்தை மீறும் வகையில் செயற்படக்கூடாது என்று ஐரோப்பிய மனித உரிமைகள் சாசன அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டுடன் முடிவடைந்த போரின்போது, கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த பெரும் பாலான தமிழ்ப் பெண் போராளிகள், இலங்கை இராணுவத் தினரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இறந்த பெண் சடலங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருக்கக்கூடும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வீடியோப் பதிவுகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக