07 ஜூன் 2012

மகிந்தரை உரையாற்ற வைக்க இந்தியா எடுத்த முயற்சி படுதோல்வியில்!

பிரித்தானிய அரச நிகழ்வு ஒன்றில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை பேச வைப்பதற்காக ஒரு வருடகாலமாக பெருமுயற்சி எடுக்கப்பட்டதன் விளைவாகவே பொதுநலவாய கருத்தரங்கில் மகிந்தவுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு உரையாற்றுவதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முகத்தில் கரியை பூசலாம் என எண்ணியிருந்த சிறிலங்கா அதிபருக்கு அந்த உரையும் இரத்து செய்யப்பட்டமை பெரும் ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மகிந்த ராசபக்சவை பிரித்தானியாவில் உரையாற்ற வைப்பதற்கு எவ்வாறு முயற்சி எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச ஆற்றவிருந்த உரை லண்டன் வாழ் தமிழர்களின் போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டதால் அவர் இராஜதந்திர தோல்வியுடன் அவசர அவசரமாக நாடு திரும்பியதை அடுத்து இந்த வருடம் நடைபெறும் பிரித்தானிய மகாராணியின் முடிசூட்டு வைரவிழாவில் எப்படியும் அவரை கலந்து கொள்ள செய்விப்பதுடன் பிரித்தானியாவில் நடைபெறும் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வில் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்வதற்கான வேலைத் திட்டம் ஒன்று கடந்த வருடம் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்காக 3 இராஜதந்திரிகள் இராஜதந்திர சேவையில் அனுபவம் பெற்ற உள்நாட்டு வெளிநாட்டு அதிகாரிகள் 7 பேர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும் இந்தக் குழுவினர்; பிரித்தானியாவில் உள்ள கொள்கை வகுப்பு தொடர்பாடல் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பிரித்தானிய அரசை அணுகியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் கடந்த டிசம்பர் மாதம் வரை பிரித்தானிய அரசு இதற்கு சாதகமான சமிக்ஞை எதையும் காணப்பிக்காததால் இந்தியாவின் உதவியை நாடியதாகவும் இந்தியா பொதுநலவாய நாடுகளின் அமைப்பினூடாக சிறீலங்காவுக்கு இந்த உதவியை செய்துகொடுத்ததாகவும் இந்தியா மலேசியா பாகிஸ்த்தான் பங்களேதேஷ் உள்ளிட்ட பெதுநலவாய அமைப்பிலுள்ள 16 நாடுகள் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவை மகராணியின் முடிசூட்டு வைரவிழாவுக்கு அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுநலவாய அமைப்பின் கருத்தரங்கிலும் இம்முறை மகிந்த ராசபக்ச உரையாற்ற முடியாமல் போனமை சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு மட்டுமல்ல அவரை பேச வைப்பதற்கு முயற்சி எடுத்த இந்தியாவிற்கும் படுதோல்வியாக அமைந்துள்ளது. லண்டன் தமிழர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டதால் மகிந்தவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பலத்த அவமானம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக