09 ஆகஸ்ட் 2012

போராளிகள் காணாமற்போனதை உறுதிப்படுத்திய புள்ளி விவரங்கள்!

2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று நிகழ்த்தியுள்ள உரை உறுதி செய்துள்ளது.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உரையாற்றினார்.
இந்த உரையில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான புள்ளிவிபரங்களை அவர் சமர்ப்பித்தார். இதன்படி போரின் முடிவில் 11,989 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக அவர் கூறினார். இவர்களில், இதுவரை 10,965 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 636 விடுதலைப் புலிகள் இன்னமும் மருதமடு, கண்டகாடு, வெலிக்கந்த, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை விட மேலும் 383 விடுதலைப் புலிகள் சட்ட நடவடிக்கைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இதன்படி, ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள, மற்றும் தற்போதும் தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 11,984 பேர் மட்டுமேயாகும். இதனால், போரின் இறுதியில் சரணடைந்த 11,989 விடுதலைப் புலிகளில், ஐந்து பேரின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரது நிலை இன்னமும் அறியப்படாதுள்ள நிலையில், அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அளித்துள்ள புள்ளிவிபரங்களே அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக மாநாட்டுக்கு வந்திருந்த ஊடகவியலாலர்கள் பேசிக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக