28 ஆகஸ்ட் 2012

விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக வாதிட வைக்கோவிற்கு அனுமதி!

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்திய மத்திய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து வாதாட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு புதுடெல்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் கடந்த 18-ந் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குறித்த இவ் விசாரணையில் தம்மையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு வை.கோ மன்றிடம் கோரினார்.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. அப்போது வைகோ, தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகளைச் சுட்டிக் காட்டியே இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான், விடுதலைப்புலிகளின் ஆதரவாளன், அனுதாபி. கடந்த தீர்ப்பாயத்திலேயே, எங்கள் இயக்கமான ம.தி.மு.க.வை, மத்திய அரசு, தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளது. புலிகளை ஆதரித்தேன் என்பதற்காக என் மீது வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளது. எனவே, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவும், இந்த விசாரணையில் நான் பங்கேற்கவும் அனுமதிக்க வேண்டும் என வை.கோ குறிப்பிட்டார்.
அதற்கு வழக்கை விசாரித்த நீதிபதி வி.கே.ஜெயின், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் தீர்ப்பாய விசாரணையிலும், புலிகள் மீதான தடை குறித்து, வைகோ தன் வாதங்களை முன்வைக்கலாம் ஆணை பிறப்பித்தார்.
தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு, சென்னையில் அடுத்த மாதம் 28, 29-ந் திகதி ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும். இந்த அமர்வுகளில் வை.கோ விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வாதிடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக